போதைப் பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் இன்று (ஜூலை 30) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 30) பாமக அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
கடந்த ஆண்டு 9 விழுக்காடு மாணவர்கள், இந்த ஆண்டு 10 விழுக்காடு மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என ஆய்வு வெளிவந்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் 10 விழுக்காடு மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான செய்தி.
இந்திய நாட்டின் தூண்களாக மாணவர்களும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்தியாவை சுமக்கும் தூண்கள், எங்கு இந்தியாவிற்கே சுமையாகி விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட மக்கள்தொகை ஏழே முக்கால் கோடி, அதில் 50 லட்சம் பேர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என ஒரு செய்தி சொல்கிறது.
இது மிகப்பெரிய பிரச்சனை, மாணவர்களையும் இளைஞர்களையும் பாதிக்கின்ற பிரச்சனை, அடுத்த தலைமுறையை காக்கின்ற பிரச்சனை.
இதுகுறித்து, மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இரண்டு முறை வலியுறுத்தினேன். ஆனால், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் மாணவர்கள் சொல்வது, ‘இந்தப் பொருள்கள் சாதாரணமாக கிடைக்கிறது அதனால், தான் நாங்கள் பயன்படுத்துகிறோம்’ என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் போதைப்பொருள்கள் தான். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் போதைப்பொருள்கள் தான்.
போதைப்பொருள்களை ஒழிக்கவில்லை என்றால், தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியும் பொதுமக்களும் சேர்ந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள்களை ஒழிக்க பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
மாணவர்களின் வெற்றியே இந்தியாவின் வெற்றி- பிரதமர் மோடி