தர்மதுரை திரைப்படத்தில், விஜய்சேதுபதி தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியே செல்லும்போது ஒலிக்கும் அப்பாடல் கேட்போர் பலருக்கும், அவரவர்களின் அம்மாவை நியாபகப்படுத்துவதாக இருக்கிறது.
ஒரு திரைப்படத்தில் உள்ள சிறந்தப் பாடல், அப்படத்தில் உள்ள மற்ற சிறந்தப் பாடல்களை மக்களிடம் சேராமல் தடுக்கும் வல்லமை கொண்டது. இது இயல்பான ஒன்றுதான். சில பாடல்கள் தப்பி அனைவரிடமும் சென்று சேர்ந்திருக்கின்றன. சிலவை சென்று சேராமல் அப்படியே தேங்கியும் இருக்கின்றன.
மேற்சொன்ன சூழல் நடந்த, பல திரைப்படங்களில் ஒரு திரைப்படம்தான், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை. ஆனால், இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் மற்ற பாடல்களை மக்களிடம் சென்று சேராமல் செய்யவில்லை. மாறாக, படத்தின் மற்ற பாடல்கள் அனைத்தும் ஒரே ஒரு பாடலை மக்களிடம் பெருமளவில் சென்று சேராமல் செய்துவிட்டன.
அதாவது, தர்மதுரை திரைப்படத்தை பொறுத்தமட்டில், படத்தின் அத்தனை பாடல்களும் நன்றாகவே இருக்கும். மக்க கலங்குதப்பா, ஆண்டிப்பட்டி கனவாக் காத்து, எந்த பக்கம், நான் காற்றிலே என திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஈர்ப்பை மக்களிடம் பெற்றது.
ஆனால், இப்பாடல்களுக்கு இணையாக ஒரு பாடல் தர்மதுரை திரைப்படத்தில் உள்ளது. கால அளவில் மிகவும் குறைவாய் இருப்பதால் என்னவோ அப்பாடல் பலரால் கண்டுக்கொள்ளப்படமால் போனது.
தர்மதுரை திரைப்படத்தில், விஜய்சேதுபதி தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியே செல்லும்போது அப்பாடல் ஒலிக்கும். அம்மாவின் தரப்பில் இருந்து எழுவதாய் இருக்கும் அப்பாடல், கேட்ட பலரின் மனதையும் உருக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக அம்மாவை விட்டு தொலைவில் இருக்கும் பல மனசுக்கும் இப்பாடல் பிடித்துப்போக அதிக வாய்ப்புள்ளது.
பாடகி ஸ்ரீ மதுமிதாவின் குரலில், யுவனின் இசையில் ‘போய் வாடா,..என் பொலி காட்டு ராசா’ என ஒலிக்கும்போதே அப்பாடலை கேட்கும் உணர்வு நம்மிடத்தில் எழுகிறது. அதன் பின்பு அப்பாடலின் வரிகளும், குரலும், இசையும் நம்மை இழுத்து பாடலோடு அணைத்துக்கொள்ளுவதாக இருக்கிறது.
நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு
நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு
என பாடலில் வைரமுத்துவின் வரிகள் ஒலிரும்போது நம்பிக்கையின் காற்றோ, ஆறுதலோ நம்மை தழுவுவது போல் இருக்கிறது.
எட்டுவச்சுப் போடா இவனே
நெற்றிக்கண் தொறடா சிவனே
வெற்றிதாண்டா மகனே
வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்
இப்பாடலில் தன் மகனை உற்சாகப்படுத்தும் அம்மாவின் மனநிலையும், தன் மகன் மீது அம்மா வைத்திருக்கும் நம்பிக்கையும், பாடலை கேட்போர் மத்தியில் அவரவர் அம்மாவின் நினைவுகளை எழுப்பும்.
மேலும், இப்பாடலை நீங்கள் கேட்கும்போது, அம்மாவின் நினைவுகள்தான் உங்களுக்குள் எழ வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் இல்லை. அப்பாவின் நினைவோ, பாட்டியின் நினைவோ, இணையின் நினைவோ என யாரோ ஒருவரின் நினைவு எழலாம்.
இப்பாடலின் மற்றுமொரு சிறப்பு யாதெனில் எவரையும் குறிப்பிடாமல், எவரையும் நம் நினைவுகளில் எழாமல் இப்பாடலை கேட்டாலும் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல நம்பிக்கையின் காற்றோ, ஆறுதலோ நம்மை தழுவும்!
இலக்கை நோக்கிப் பாய்ந்த தோட்டாக்கள்; பதக்க மழையில் நடிகர் அஜித்குமார்