சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 29) 42-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி பேசியதாவது:
பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த நாள் மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் முக்கியமான நாள். ஏனெனில், ஆசிரியர்கள்தான் இளைஞர்களை உருவாக்குகிறார்கள். தேசத்தை கட்டமைப்பவர்கள் ஆசிரியர்கள்தான்.
ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறார்கள். நாம் இளைஞர்களின் சாதனைகளை கொண்டாடவே இங்கு கூடியிருக்கிறோம். இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவுபவர்கள். இந்திய இளைஞர்களின் மீது உலகத்தின் பார்வையே உள்ளது.
“இளைஞர்களே எனது நம்பிக்கை” என்று சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றைக்கும் பொருந்தும். அதுபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை அப்துல் கலாம். அவரது சாதனைகள் இன்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்துகிறது.
கொரோனா பெருந்தொற்று எதிர்பாராத ஒரு சம்பவம். நூறாண்டுக்கு வரும் ஒரு சோதனை இப்போது வந்துவிட்டது. அதிலிருந்து மீள உதவிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக, ஒரு வலுவான அரசால் எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், தனது கொள்கைகளால் மக்களை வழிநடத்திச் செல்ல முடியும். மக்களின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவத்தை வலுவான அரசால் மட்டுமே கொடுக்க முடியும்.
அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை மூலமாக மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வளர்ந்து வருகிறது. கைபேசி தயாரிப்பில் கடந்த ஆண்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கும் மாணவர்களுக்குமான காலம். மாணவர்களின் கற்றலே இந்தியாவின் கற்றல். மாணவர்களின் வெற்றியே, இந்தியாவின் வெற்றி, மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. உங்களது வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் தீட்டும்போது இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து தீட்டுகிறீர்கள்.
இவ்வாறு, பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்