குஜராத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜாரத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் இந்தியாவின் வைர நகரமான சூரத் நகருக்கு சென்றார். சூரத்தில் உள்ள லிம்பியத் என்ற இடத்தில் ரூ.3400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த வளர்ச்சித்திட்ட விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சூரத் நகரின் ஜவுளி மற்றும் வைர தொழில்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது. சூரத் நகரின் ஆயத்த ஆடைகளுக்கு, காசி மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய சந்தை உள்ளது. சூரத் ஜவுளி வியாபாரிகளின் வசதிக்காக சூரத்திலிருந்து காசிக்கு புதிய ரயிலை இயக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், சூரத் நகரில் வைர தொழிலையும், ஜவுளி தொழிலையுமே நம்பி உள்ளனர். தற்போது தொடங்கப்பட்டுள்ள வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகர திட்டம் முடிந்தவுடன், உலகிலேயே பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக சூரத் திகழும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சூரத் திட்டம் மட்டுமல்லாது, பாவ்நகரில் சிஎன்ஜி முனையம் அமைப்பதற்கான திட்டத்தையும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மொத்தமாக, இந்த இரு நாள் பயணத்தில் ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: 8 சிறுத்தைகளுக்கு 2000 பெயர்களா?.. பிரதமர் மோடியின் அறிவிப்பால் கொட்டிய பெயர் மழை