சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 140 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு காவி நிறம் பூசப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன்காரணமாக, பயணிகள் மற்றும் விமான சேவைகளுக்கு ஏற்றார்ப்போல், விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் முழுவீச்சில் நடத்தி வருகிறது.
சென்னை விமான நிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள் நடக்கும், செக்-இன்-கவுன்டர்கள் 64 மட்டுமே உள்ளன.
இந்நிலையில், இந்த ஒருங்கிணைத்த புதிய முனையம் 5 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 140 செக்-இன்-கவுன்டர்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுன்டர்கள் முதற் கட்டமாகவும், அடுத்த 40 கவுன்டர்கள் இரண்டாம் கட்டமாகவும் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
இந்த புதிய கவுன்டர்களின் மீது வர்ணங்கள் பூசும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அனைத்து கவுன்டர்களுக்கும் ஒட்டு மொத்தமாக காவி நிறம் பூசப்பட்டு வருகிறது.
ஆனால் ஏற்கனவே உள்ள பழைய முனையத்தில் உள்ள செக்-இன்-கவுன்டர்கள், சிவப்பு, மஞ்சள், நீலம் என பல்வேறு நிறங்களில் உள்ளன. புதிய கவுன்டர்கள் அனைத்தும் காவி நிறத்தில் இருப்பதால், சென்னை விமானநிலையம் காவி மயமாக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 8 சிறுத்தைகளுக்கு 2000 பெயர்களா?.. பிரதமர் மோடியின் அறிவிப்பால் கொட்டிய பெயர் மழை