தெற்கு ரயில்வே நடைபாதை கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
தீபாவளி பரிசை பண்டிகை நாட்கள் என்றால் சலுகைகள், பரிசுப்பொருட்கள் தரப்படுவது இயல்பான ஒன்று. தற்போது தீபாவளி சீசன் களைகட்டியுள்ளதால் பலவித கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன. அதேபோல பரிசுப்பொருட்களை தர நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
சமீபத்தில், தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டது. மேலும், புதுச்சேரி அரசு ‘தீபாவளி பண்டிகையையொட்டி, நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில் அதற்கு உண்டான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்’ என அறிவித்துள்ளது.
பல நிறுவனங்களும் தீபாவளிக்காக தங்களது ஊழியர்களுக்கு இனிப்புகளையும், போனஸ்களையும் தர தயாராகி வருகின்றன. இப்படியான சூழலில் ரயில்வே நிர்வாகம் பொது மக்களுக்கு ஒரு பரிசு கொடுத்துள்ளது. அதுவும் கடுப்பாகும்படியான பரிசை தந்துள்ளது.
அதென்னவென்றால், ரயில் நிலையங்களில் நடைபாதை (பிளாட்பாரம்) டிக்கெட் கட்டணத்தை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. ரூ 10-ல் இருந்து ரூ 20-ஆக நடைபாதை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலங்கள் என்பதால் சென்னை சென்ட்ரல் உள்பட 8 இடங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வானது 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் கூட்டத்தை குறைக்கவே இம்முடிவு என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு அரிசி சர்க்கரை இல்லை..மாறாக வங்கி கணக்கில் பணம் உண்டு – அறிவித்த முதல்வர்