கல்வி நிறுவனங்களில் பொதுவான ஆடை நடைமுறையை அமல்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிறுவனத்துக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சைகள் உருவானது.
இதைத்தொடர்ந்து, கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதின்றம் தடையை விலக்க மறுப்பு தெரிவித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுப்பதாக ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பொதுவான ஆடை நடைமுறையை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவையும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுக்களுடன் விசாரணைக்கு பட்டியலிடுமாறு வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பல முறை உங்களுக்கு சொல்லிவிட்டோம். ஒவ்வொரு நாளும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறீர்கள். அவை ஒவ்வொன்றையும் விசாரணைக்கு ஏற்குமாறு குறிப்பிடுகிறீர்கள். உங்களுடைய மனு வரிசைப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை காத்திருக்கவும்’ என்றனர்.
அப்போது குறிக்கிட்ட உபாத்யாய, ‘அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஹிஜாப் மனுவை உடனடி விசாரணைக்கு ஏற்க ஒப்புக்கொண்டுள்ளீர்கள். எனது மனு கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்டது’ என்றார். இருப்பினும், அவருடைய மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மாணவர்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில், சமூக பொருளாதார நீதி, ஜனநாயக நடைமுறைகளை அறியும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க ஒரு நீதி ஆணையம் அமைக்க வேண்டும், கல்வி நிறுவனங்களில் பொதுவான ஆடை நடைமுறையை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடவும் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளைத் தவிர சட்ட ஆணையத்தையும் பிரதிவாதிகளாக சேர்க்க வேண்டும்.
இவ்வாறாக அஸ்வினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இனி கூடுதல் டேட்டா!