சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி ஒரு அரசு பள்ளியில் உள்ள வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றிக் காட்டியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும், நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் பல்வேறு புதுவிதமான முயற்சிகள் இடப்பெற்றிருந்தன. குறிப்பாக, பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை பலராலும் பாராட்டைப் பெற்றது.
அதன் ஒரு பகுதியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, ஒரு அரசு பள்ளியில் உள்ள வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றிக் காட்டியுள்ளார்.
இவர் கோவையில் உள்ள சுந்தராபுரம் அரசு மேல்நிலை பள்ளியின் வகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாக, அவரது சொந்த செலவிலேயே மாற்றியுள்ளார்.
அந்த ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள வசதிகள்:
- வகுப்பறை முழுவதும் மனதை இதமாக்கும் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
- தரையில் சிமெண்ட் பூச்சூக்கு மாற்றாக டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.
- இணையம் சார்ந்த வகுப்புகளை நடத்த 42 அங்குல தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது.
- அந்த தொலைக்காட்சி கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- கணினியையும், தொலைக்காட்சியையும் இணைக்கவும், இயக்கவும் வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து மாணவர்களுக்கும் மேசையுடன் இணைக்கப்பட்ட தனித்தனி நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.
- ஆசிரியருக்கு மேசையுடன் சுழலும் எக்சிகியூட்டிவ் நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.
- வகுப்புகளை நடத்துவதற்காக புரஜெக்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
- புரஜெக்டர் மூலம் பாடம் நடத்த வெள்ளைத் திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சாதாரண வகுப்புகளை நடத்த காந்தசக்தி கொண்ட பச்சைப் பலகை நிறுவப்பட்டுள்ளது.
- புத்தக அலமாரிகள் இரு இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
- மொத்தம் 500 புத்தகங்கள் வாங்கித் தரப்பட்டுள்ளன.
- சன்னல்களில் திரை சீலைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது முக நூல் பக்கத்தில்,
“பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வராமலேயே பல சாதனைகளை படைத்துள்ளது. இப்போது கல்லூரிகளில் கூட இல்லாத வசதிகளுடன் ஒரு ஸ்மார்ட் வகுப்பறையை பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவர் அவரது சொந்த செலவில் நிறுவியுள்ளார். இது தான் பா.ம.க. 2.0.
இதையெல்லாம் சாத்தியமாக்கிய அசோக் ஸ்ரீநிதிக்கு பாராட்டுகள்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதை விட கூடுதல் வசதிகளுடன் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும்.
இப்போது இந்த ஸ்மார்ட் வகுப்பறையை வியந்து பார்க்கும் நீங்கள், வெகு விரைவில் திரும்பும் திசையெல்லாம் இத்தகைய வகுப்பறையை பார்ப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.