நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 18) தொடங்கி, வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடந்ததையொட்டி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மதியம் அவை தொடங்கியது.
அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு, அக்னிபாத் திட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரண்டு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்றே நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளான இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும், விலை உயர்வு, பணவீக்கம், அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இரு அவைகளிலும், எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைத்தலைவர்களும் நிராகரித்ததால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத்துவங்கினர். மேலும், விலை உயர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தி அவைத்தலைவர்களின் இருக்கைக்கு அருகே வந்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மக்களவைக்குள் பதாகைகள் கொண்டுவர அனுமதி இல்லை என அவைத்தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
எதிர் கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியைத் தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர்கள் அறிவித்தனர்.
- மழைக்கால கூட்டத்தொடர்: முதல் நாளே கடும் அமளி
- கள்ளக்குறிச்சி வழக்கில் தொடர்புடைய பள்ளி நிர்வாகிகள் கைது