வேலூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அடுத்த ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் நேற்று, எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த எருது விடும் திருவிழாவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் ஓடுபாதையில் சீறிபாய்ந்தன.
அப்போது போட்டியில் பங்கேற்பதற்காக காளை மாடு ஒன்றை அதன் உரிமையாளர் அழைத்து வந்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு ஓடுபாதையின் அருகே நின்று கொண்டிருந்த புலிமேடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ்குமாரை காளைமாடு முட்டியது. இதில் சுரேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் லியோ பட படப்பிடிப்பில் தீவிர கட்டுப்பாடு – உஷாரான படக்குழு!