மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தெரிவித்த பதிலால் நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி காணொளி ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கில் மீரா மிதுனும் அவரது நண்பரான ஷ்யாமும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத அளவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: “என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” பொன்னியின் செல்வன் புரோமோஷனில் சரத்குமார் ஆவேசம்!
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி மீரா மிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை என்றும், விரைவில் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுன் தலை மறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வரும் காரணத்தாலும் அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாலும், அவரை கைது செய்ய முடியவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.