காவல் துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் வீட்டில், எடுபுடி வேலை செய்யும், ஆர்டர்லி முறை பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. இந்த முறையால், காவல் துறையில் பணியாற்றிய காவலர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். கடந்த 1979 ஆம் ஆண்டில் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டடதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில், எடுபிடி வேலை செய்வதற்காக, ஏறத்தாழ பத்தாயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
காவல் துறையில், காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், தேர்வு செய்யப்படும் காவலர்கள், உரிய பணிகளில் அமர்த்த வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இப்போது பணியில் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளிலும், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் வீடுகளிலும், ‘அயல்பணி’ என்பதன் அடிப்படையில், பத்தாயிரத்திற்கும் அதிகமான காவலர்கள், ஆர்டர்லி முறையில் எடுபிடி வேலை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆர்டர்லி முறை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், காவலர் ஒருவர், 2018ல் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது, இந்த வழக்கினை விசாரித்தார் நீதிபதி கிருபாகரன். காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக எத்தனை காவலர்கள் பணியாற்றுகின்றனர் என்று வினவியதோடு, அதற்கான பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து, அப்போது, தமிழகத்தின் டி.ஜி.பி.,யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், காவல் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.
ஆர்டர்லி முறை…
அதில், ஆர்டர்லி முறை 1979 ஆம் ஆண்டிலேயே ஒழிக்கப்பட்டு விட்டது என அரசாணை உள்ளது. தற்போது, ஆர்டர்லி முறை உள்ளதா? தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை காவலர்கள் ஆர்டர்லியாக பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கையைப் பட்டியலாக தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார் டி.கே. ராஜேந்திரன்.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில், ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், நடைமுறையில் இன்னும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதுகுறித்து, காவலர் ஒருவர் கூறுகையில், மிகச் சுவையாக சமைக்கத் தெரியும் என்பதற்காகவே, காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில், காவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
பாத்திரங்கள் கழுவுதல், துணிதுவைத்தல், நாய் கூட குளிப்பாட்டுதல்,தோட்டப் பராமரிப்பு, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல், அதிகாரிகளின் மனைவியர், வெளியில் சென்று ஷாப்பிங் செய்யும் போது கூடை துாக்குதல் உள்ளிட்ட வேலைகளையும் போலீசார் செய்து வருகின்றனர். ஆர்டர்லி முறையில் இருக்கும் காவலர்களுக்கு எளிதில் பதவி உயர்வு, அன்றாட செலவுக்கு பணம், குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் மற்றும் வேலைக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.
இதனால், எடுபிடி வேலையை விரும்பி ஏற்கும் காவலர்களும் உண்டு. சரியாக கணக்கெடுத்தால், ஏறத்தாழ பத்தாயிரம் காவலர்கள் வரை ஆர்டர்லியாக பணியாற்றுவது தெரியும். சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற காவல் துறை அதிகாரியின் பெற்றோரைப் பராமரிக்க, ‘ஆர்டர்லி’ முறையில் இரு பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அதில் ஒரு பெண் காவலர், ‘மப்டி’யில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய போது, சல்லாப ஆசாமி ஒருவர், ‘ஆசை’க்கு இணங்க வருமாறு அவரை அழைத்து, தகராறு செய்த சம்பவமும் சமீபத்தில் வைரலானது. காவல் துறையில், காவல் துறையில் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகிறது; பணிச்சுமையும் அதிகமாக உள்ளது. அதனால், ஆர்டர்லி காவலர்களை திரும்பப் பெற்று, காவல் நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் என்பது தான் காவலர்கள் பலருடைய எண்ணமாக உள்ளது.
பப்ஜி விளையாட விடவில்லை என்பதற்காக தாயின் உயிரை எடுத்த சிறுவன்; நடந்தது என்ன?