இணையவழி சூதாட்டங்கள் வர துவங்கிய பிறகு நாட்டில் சூதாட்டங்கள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. வயது பேதமின்றி, தனி நபர்களும், இல்லறத்தார்களும் இணையவழி ரம்மி போன்ற சூதாட்டங்களில் பணத்தை இழந்து கடன் நெருக்கடியில் சிக்கி உயிர்களை மாய்த்துக் கொள்வது தொடர்ந்து வருகிறது.
அதனால் இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டம் போன்றவை சம்பந்தமான விளம்பரங்களை இந்திய ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்டம் காரணமாக பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பல்வேறு தரப்பிலும் சமூக சிக்கல்கள், நிதி பிரச்னைகள் உள்ளிட்டவற்றிற்குக் காரணமாக இந்த சூதாட்டம் விளங்கி வருகின்றது. மேலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை இதனால் பெருமளவில் பாதிக்கின்றது.
அதுமட்டும் அல்லாது இதன் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவர்களை சூதாட்ட வலையில் சிக்கவைக்கும் விதமாக உள்ளது. எனவே, சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை செய்தி நாளேடுகள், தொலைக்காட்சிகள், டிஜிட்டல் ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஒன்றிய அரசானது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான குரல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சியில் இதற்கு எதிராக தடை சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட்டது. ஆனால் இந்த தடை சட்டம் வலுவானதாக இல்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்கு மீண்டும் அனுமதி அளித்தது.
கடந்த சில வாரங்களாக ஆன்லைன் சூதாட்டப் பிரச்சனை காரணமாக தற்கொலைகள் மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை தற்போது அமைத்துள்ளது. எனவே, விரைவில் தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்திற்கு தடை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் எழுந்த திடீர் புகார்!