கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி 324 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக அரசின் பெவ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை மட்டுமில்லாது சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை என்பது மற்ற மாநிலங்களை விட அமோகமாகவே நடக்கும். இதனால் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் மூலம் 300 க்கும் மேற்பட்ட சில்லறை கடைகளில் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கேரளாவில் 3 கோடியே 30 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த 30 லட்சம் பேரில் 27 லட்சம் ஆண்களும், 3 லட்சம் பெண்களும் தினமும் மது அருந்துவதாக சொல்லப்படுகிறது. அதிலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் இம்மாநிலத்தில் தான் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாம்.
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவின் அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகையையொட்டி மது விற்பனை மிக அதிகமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்சனை காரணமாக மது விற்பனை பெரிய அளவில் நடைபெறவில்லையாம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு எல்லா மக்களும் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதால் அங்கு தற்போது மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஓணப்பண்டிகை தொடங்கிய முதல் 5 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் மது விற்பனை சுமார் 30 சதவீதம் அதிகமாகி இருப்பதாக மாநில மது விற்பனை கழகத்தின் நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா அறிவித்துள்ளார்.
மேலும், கேரளாவில் கடந்த ஆண்டு ஓணப்பண்டிகைக்கு மது விற்பனை ரூ.561 கோடிக்கு மட்டுமே நடைபெற்றதாகவும் ஆனால் இந்த ஆண்டு பண்டிகை தொடங்கிய முதல் 5 நாளிலேயே விற்பனை ரூ. 324 கோடியை தாண்டிவிட்டதாகவும், அதனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கான மது விற்பனை ரூ. 700 கோடியை தாண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டும் மாநிலம் முழுக்க புதிதாக 96 மது விற்பனை கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் இக்கடைகள் மூலமாக மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
”உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பாக….” – மு.க.ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்து!