சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை வரும் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது தான் நவீன அதிவேக ரயில்கள். இவற்றை ரயில்வே அமைச்சகம் நாட்டில் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித் தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5-வது சேவை சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்தச் சேவை வருகிற நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவி கொலை வழக்கில் காதல் கொலையாளி வாக்குமூலம்!