தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. இருப்பினும், அவ்வபோது மழை பெய்த வண்ணம் இருந்தது. வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மற்றும் ஒடிசாவிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருவமழை தொடக்கம் காரணமாக, நவம்பர் 1, 2 தேதிகளில் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் நெல்லூர் முதல் கடலூர் வரை மிக கனமழை பெய்யக்கூடும்.
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேசமயம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
இவ்வாறு தெரிவித்தது.
இதையும் படிங்க: ‘மறைந்து ஒரு வருடமாகிறது’ – புகழ்பெற்ற நடிகருக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்!