நீட் தேர்வு முடிவுகள் நள்ளிரவில் வெளிவந்தது. சென்ற ஆண்டை விட அதிகளவிலான மாணவர்கள் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரையில் இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது.
வெளிவந்துள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு 8,70,074 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வில் மொத்தமாக 56.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நீட் தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா தேசிய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஆஷிஷ் பத்ரா வத்ஷா என்ற மாணவர் இரண்டாம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் என்ற மாணவர் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 99.9997733 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே மதிப்பெண் எடுத்த கர்நாடகாவை சேர்ந்த ருச்சா பவாஷி என்ற மாணவிக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த பேச்சு எழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. அதன்படி, ஓசி வகுப்பினரின் கட் ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு 117 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி வகுப்பினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு 93-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், நீட் தேர்வு முடிவுகளின் டாப் 50-யில் 9 பேர் கர்நாடகாவிலிருந்தும், குஜராத் மற்றும் டெல்லியிலிருந்து தலா 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். அதேபோல தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து தலா 4 பேரும், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவிலிருந்து தலா 3 பேரும், தமிழகம், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவிலிருந்து தலா 2 பேரும் டாப் 50-ல் இடம் பிடித்துள்ளனர்.