சூப்பர்ஸ்டார் என்றவுடன் நினைவுக்கு வருவது ஒரு பெயர்தான் அப்பெயர் ‘ரஜினிகாந்த்’ என்பதே. ஆனால், தற்போது சூப்பர்ஸ்டார் என்றவுடன் ‘லேடி சூப்பர்ஸ்டாரா’ என பலர் கேட்கிறார்கள். அதுதான் நயன்தாராவின் உழைப்புக்கு கிடைத்த பரிசு.
நடிகர் சரத்குமார் நடித்த ‘ஐயா’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், நயன்தாரா. ‘ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்’ என 2005-இல் ஆரம்பித்த பயணம் இன்று வரை சில ஏற்ற இறக்கங்களுடன் பெரும் வெற்றிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. இப்பயணத்தில் நயன்தாரா பல கதாப்பாத்திரத்தின் வழியே ரசிகர்களை வந்தடைந்திருக்கிறார். திடீரென்று யோசித்து பார்த்தால் கூட, நிமிடப்பொழுதில் ஒவ்வொருவருக்கும் நயன்தாரா நடித்த கதாப்பத்திரங்களில், சில கதாப்பாத்திரங்களாவது சட்டென்று நினைவுக்கு வந்துவிடும்.
கமர்ஷியல் திரைப்படங்களில் ஒரு கதாநாயகிக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற நிலைமை நீடித்தாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்பவர்தான் நயன்தாரா. கிடைக்கும் கதாப்பாத்திரங்களின் மூலம் அட்டகாசமாக ஸ்கோர் செய்யும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்!
நயன்தாரா நடித்த பல காதாப்பாத்திரங்களில் சில கதாப்பாத்திரங்கள் எப்போதும் மனதுக்கு நெருக்கமானவை. அப்படி நெருக்கமான காதாப்பாத்திரங்களில் சிலவற்றைக் குறித்து இப்பதிவில் காண்போம்.
கீர்த்தி என்கிற கோமலவள்ளி
‘யாரடி நீ மோகினியில்’ கீர்த்தி என்கிற கோமலவள்ளியாக அழகாலும் அமைதியான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார், நயன்தாரா. படத்தின் ஆரம்பத்தில் சூர்ரென்றும், படத்தின் இடைப்பகுதியில் குற்ற உணர்வின் கொப்பளிப்பிலும், அதன்பின் குழப்பத்தின் பிடியிலும், பொறாமையின் தவிப்பிலும், காதலின் பிடியிலுமென நயன்தாரா பல உணர்வுகளை, கீர்த்தியின் வழியே வெளிப்படுத்தியதை அவ்வளவு எளிதில் எவராலும் மறுக்க முடியாது.
‘சிகப்பு கலர் புடவ..அதுக்கு மேட்சிங்கா ஜாக்கெட்டு, தல நெறைய மல்லிகப்பூ..அப்படியே நடந்து வந்தாங்கனா… தேவத மாதிரி இருப்பாங்க..’ என வாசு கதாப்பாத்திரம் கூறும்போது, நயன்தாரா அவ்வாறாகவே வந்து, தேவதையாகவே காட்சியளிப்பார். இன்றளவும் பலரின் விருப்ப கதாப்பாத்திராமாக கீர்த்தி என்கிற கோமலவள்ளி இருக்கிறார்.
ஆதவனிலும், பாஸ் என்கிற பாஸ்கரனிலும் தாராவாக, சந்திரிகாவாக காமெடி கலந்த நடிப்பில் அசத்தியிருப்பார். ’யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே’ என்றும் ‘வாராயோ வாராயோ மோனலிசா’ என்றும் ரசிக பட்டாளங்களை, இளைஞர்களை தலைசுற்ற வைத்தார் நயன்தாரா.
ரெஜினா
ராஜா ராணியின், ரெஜினா கதாப்பாத்திரம் அதுவரை நயன்தாராவை பிடிக்காதவர்களையும் பிடிக்க வைத்தது. கமர்ஷியலில் என்ன நடிப்பிருக்கிறது? என்று கேட்ட பலருக்கும் தனது நடிப்பால் இப்படத்தின் மூலம் நயன்தாரா பதில் அளித்தார். துருதுரு என ஒரு பாதியிலும், சூர்ரென்று ஒரு கட்டத்திலும், காதலை சரிவர வெளிபடுத்த முடியாமல் திணறுவதும், காதல் தோல்வியில் வீழ்ந்திருப்பதுமென இப்படத்தில் தனது முதிர்ந்த நடிப்பால் ரெஜினா கதாப்பாத்திரத்தை நயன்தாரா மெருகேற்றியிருப்பார். பாலின பேதமின்றி பலர் ரெஜினா கதாப்பாத்திரத்தில் தன்னை உணர்வதாக அப்போது பதிவு செய்தார்கள்.
அஞ்சலியும் காதம்பரியும்
நானும் ரௌடிதான் திரைப்படத்தில் காதம்பரியாய் காது கேளாத பெண்ணாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அழுகை, புன்னகை, வஞ்சம், அன்பு, உற்சாகம் என நயன்தாரா ஓவ்வொரு உணர்வையும் கதையோடு கதையாக, அதே சமயம் நம்மை ஆட்கொள்ளும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இமைக்கா நொடிகளில் அஞ்சலி விக்ரமாதித்தியனாக, ஒரு சிபிஐ அதிகாரியாக நயன்தாரா அனைவரையும் தனது நடிப்பால் மிரட்டி இருப்பார். மிரட்டலை தவிர்த்து படத்தின் ஃபிளாஷ்பேக்கிற்கு சென்றால் பலரையும் கண்ணீர் விட வைத்திருப்பார்.
பொதுவாகவே, நடிப்பால் ரசிகர்களை கவரும் கதாநாயகிகள் விமர்சன ரீதியான திரைப்படத்தில் மட்டுமே நடித்திருப்பார்கள் என்ற பிம்பம் இருக்கிறது. அந்த பிம்பத்தை அவ்வபோது பலர் உடைத்தெறிந்தாலும், நயன்தாரா அந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து, ‘எனக்கு அது பொருந்தாது’ என்று தன் வளர்ச்சியின் மூலம் உரக்க கூறுகிறார்.
இப்படியாக கமர்ஷியல் மூலம் உரக்க கூறினாலும், மற்றொரு பக்கத்தில் மாயா, அறம் , டோரா, கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா என வுமேன் சென்ட்ரிக் திரைப்படங்களையும் கோலிவுட்டிற்கு கொடுத்து அதிலும் வெற்றி கனியை பறிக்கிறார்.
நயன்தாரா ஒருநாளில் உருவான ஸ்டார் இல்லை. படிப்படியாக தான் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் தனது நடிப்பை மெருகேற்றி மெருகேற்றி உயர்ந்திருக்கிறார். சூப்பர்ஸ்டார் என்றவுடன் நினைவுக்கு வருவது ஒரு பெயர்தான் அப்பெயர் ‘ரஜினிகாந்த்’ என்பதே. ஆனால், தற்போது சூப்பர்ஸ்டார் என்றவுடன் ‘லேடி சூப்பர்ஸ்டாரா’ என நூற்றில் ஒருவராவது கேட்கிறார்கள். அதுதான் நயன்தாராவின் உழைப்புக்கு கிடைத்த பரிசு.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு தினவாசல் சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
இதையும் படிங்க: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்