முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி கைப்பற்றியுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் பலவித முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டை முன்னெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த ஆண்டு முடிவு செய்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி மகளிர் பிரீமியர் லீக் எனும் டபிள்யுபிஎல் தொடர் தொடங்கியது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது.
இப்போட்டியில், மும்பை மற்றும் தில்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தில்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங் உடன் ஷெபாலி வர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
நான்கு பந்துகளை சந்தித்த ஷெபாலி தலா ஒரு சிக்ஸ் பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆகி சரிவை தொடங்கி வைத்தார். இதன்பின் வந்தவர்களில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை. ஓரளவுக்கு நிலைத்து ஆடி 35 ரன்கள் சேர்த்திருந்த கேப்டன் மெக் லேனிங் ரன் அவுட் ஆனார்.
மொத்தத்தில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு தில்லி அணி 131 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியின் சார்பாக, ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் விக்கெட்டுகள் வீழ்ந்தது. 3 ஓவர்களுக்கு 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது.
இருப்பினும், மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நாட் ஷிவர் பிரன்ட் அந்த அணிக்கு கைகொடுத்தார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் விளையாடினார். ஹர்மன் பிரீத் கவுர் 37 ரன்களுக்கு அவுட் ஆனாலும், நாட் ஷிவர் பிரன்ட் இறுதிவரை களத்தில் இருந்து 60 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம், முதல் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கோப்பையை மும்பை அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன்; வெளிவந்த முக்கிய அறிவிப்பு..