மகளிர் ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் மும்பை அணி பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
டபிள்யுபிஎல் எனும் மகளிர் ஐபிஎல் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணி சார்பில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 28 ரன்கள் அடித்தார். ஏனையோர் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை.
அதேநேரம், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 23, சோஃபி டிவைன் 16, தீக்ஷா கசத் 0, எலிஸ் பெரி 13, ஹீதர் நைட் 0, கனிகா அஹுஜா 22, ஷ்ரேயங்கா பாட்டீல் 23, மீகன் ஷட் 20, ரேணுகா சிங் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மொத்தத்தில், பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்களே சேர்த்தது.
மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3, சாய்கா இஷாக், எமிலியா கெர் ஆகியோர் தலா 2, நேட் ஸ்கீவர், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
மும்பை இந்தியன்ஸ் சார்பில், யஸ்திகா பாட்டியா 23 ரன்களுக்கு வெளியேற, ஹேலி மேத்யூஸ் – நேட் ஸ்கீவர் கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ஹேலி மேத்யூஸ் 77 ரன்களுடனும், நேட் ஸ்கீவர் 55 ரன்களுடனும் களத்தில் இருக்க, மும்பை அணி 14.2 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வென்றது.
இன்றைய டபிள்யுபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – யுபி வாரியர்ஸ் அணிகள் மோதும் போட்டியானது நவி மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சிக்கன் பிரியாணியில் பூரான்; அதிர்ந்த இளைஞர்