இந்திய அணிக்குள் மகேந்திர சிங் தோனியை மீண்டும் இணைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இத்தொடரில், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற ஆசியக் கோப்பை, தற்போது இருபது ஓவர் உலகக் கோப்பை என இரு முக்கிய தொடர்களில் இந்திய அணி பெரியதாக சோபிக்காமல் போனது ரசிகர்களையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் (பிசிசிஐ) ஏமாற்றமடைய செய்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டுவருவது குறித்த ஆலோசனையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்படலாம் என அதிகார வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையின்போது இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டார். எனினும் தகுதி சுற்றில் இந்திய அணி வெளியேறியது. அப்போது தோனிக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிராவோ உட்பட 8 வீரர்கள் விடுவிப்பு! முழு விவரம் உள்ளே