ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது ஓவர் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததன் காரணமாக நேற்றை ஆட்டம் தாமதமாகவே தொடங்கப்பட்டது. அதனால் இருபது ஓவர்கள், எட்டு ஓவர்களாக குறைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 8 ஓவர்களுக்கு 90 ரன்கள் குவித்தது. இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியால் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. 20 பந்துகளுக்கு 46 ரன்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆம், சர்வதேச அளவில் இருபது ஓவர் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
அதன்படி, சர்வதேச அளவில் இருபது ஓவர் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்களின் பட்டியலில், ரோஹித் சர்மா 176 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், மார்டின் கப்டில் 172 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மேலும், கிறிஸ் கெயில், இயான் மோர்கன், ஆரோன் பின்ச் முறையே 124,120, 119 சிக்ஸர்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: அடித்து தூள் கிளப்பிய ரோஹித், டிகே! 2வது டி20-யில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா