தொங்கு பாலத்தை தாங்கிக் கொண்டிருந்த 49 இரும்புக் கயிறுகளில் கிட்டத்தட்ட 22 கயிறுகள் பாலம் அறுந்துவிழுவதற்கு முன்பே பாதி அறுந்தநிலையில்தான் இருந்ததாக அதிர்ச்சி கரமான தகவல் வெளிவந்துள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது கடந்த 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 230 மீட்டர் நீள தொங்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலமானது சுற்றுலாவிற்கு வரும் முக்கிய இடமாக திகழ்ந்து வந்த நிலையில், அந்த பாலத்தில் 6 மாதங்களாக தனியார் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்தப் பாலத்தில் தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் குவிந்தனர்.
அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர். இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயத்திற்கு உள்ளாகினர். இந்த விபத்து சமந்தமாக வழக்குகள் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் 9 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு, அளித்த அறிக்கையில், மோர் பால விபத்தில் நாட்டின் பல ஆண்டுகள் பழைமைவாய்ந்த பாலத்தின் நிலையை மேம்படுத்துவதிலும், அதில் வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மிக மோசமான கவனக்குறைவு இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொங்கு பாலத்தை தாங்கிக் கொண்டிருந்த 49 இரும்புக் கயிறுகளில் கிட்டத்தட்ட 22 கயிறுகள் பாலம் அறுந்துவிழுவதற்கு முன்பே பாதி அறுந்தநிலையில்தான் இருந்திருக்கிறது. சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்த போது இதற்கான இதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மீதமிருந்த 27 இரும்புக்கயிறுகள்தான் விபத்தின்போது அறுந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அதில் கூறப்பட்டுள்ளதாவது;
பாலத்தை மீண்டும் திறக்கும்முன், நகராட்சி அதிகாரிகள் செயற்குழு ஆணையம் கவனக்குறைவுடன் இருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டு, நகராட்சிக் கூட்டத்தைக் கூட்டி, பாலத்தை திறப்பது குறித்து ஆலோசித்து ஒப்புதல் அளிக்கத்தவறியிருக்கிறது.
பாலத்தில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், பாலத்தை திறக்கவும், அதனை மேம்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனம் நகராட்சியிடம் அனுமதி கோரவேயில்லை. நகராட்சியும் பாலத்தின் திறப்பு குறித்து எந்த அனுமதியும் வழங்கவில்லை. இரு தரப்பினருமே மிக மோசமான கவனக்குறையுடன் இருந்துள்ளனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; யாரெல்லாம் இந்திய அணியில்?