கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கியதில், மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் நட்சத்திர உணவு விடுதி உள்ளது. இந்த நட்சத்திர விடுதியில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் கச்சிப்பட்டு கீழாண்டைத் தெருவைச் சேர்ந்த 51 வயதான ரங்கநாதன், 30 வயதான நவீன்குமார், 18 வயதான திருமலை ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கியதில், அவர்கள் மூவரும் மயக்கமடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தொட்டியில் இருந்த கழிவுநீரை அகற்றி ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோரின் சடலங்களை மீட்டனர். இதைத்தொடர்ந்து, காவலர்கள் சடலங்களை உடல் கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உணவு விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, உணவு விடுதி மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையிலிருந்து 1.65 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்- போக்குவரத்துத்துறை தகவல்