இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தில்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டது. அன்றைய தினமே முடிவுகளும் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்தலின் முடிவில், திரௌபதி முர்மு மொத்தம் 6,76,803 (64.03%) வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 3,80,177 (36%) வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திரௌபதி முர்மு வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பதிவான எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்களின் வாக்குகளில் திரௌபதி முர்மு 2,824 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் 540 எம்.பி-களின் வாக்குகளையும் பெற்றார். அதேபோல், யஷ்வந்த் சின்ஹா 1,877 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் 208 எம்.பி-க்களின் வாக்குகளையும் பெற்றார்.
இதனை தொடர்ந்து, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவர் பொறுப்பை வகித்துவரும் ராம்நாத் கோவிந்த் பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா கடந்த ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பல்வேறு மாநில முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள், பத்ம விருது பெற்றவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு வரும் திங்கள் கிழமை (ஜூலை 25) பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியினரும் திரௌபதி முர்முவுக்கு வாக்களிப்பு