மேட்டூர் அணை 120 அடி எனும் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 9,500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9.30 மணியளவில் 35,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 20,000 கன அடியாக இது அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ரூ.850 கோடி செலவில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயில் புனரமைப்பு திட்டம்-பிரதமர் மோடி அறிவிப்பு
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 900 கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, நள்ளிரவு நேரத்தில் அணையின் நீர்மட்டம் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இதனால், மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதையடுத்து, உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மின்சார உற்பத்திக்காக 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 2 மாதமாக முழு கொள்ளளவில் நீடித்த நீர்மட்டம் கடந்த மாதம் 23-ம் தேதி மாலை 119.95 அடியாக குறைந்தது. 19 நாட்களுக்கு பின்பு மீண்டும் 120 அடியை எட்டியுள்ளது சாதனையாக கருதப்படுகிறது.
தற்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.