பாலியல் தொழில் நடத்தி வந்ததால் மேகாலயாவின் பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மாராக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயா பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் பெர்னார்ட் மாராக். இவருக்கு மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் துராவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அந்த பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் பெர்னார்ட் மாராகின் பண்ணை வீட்டில் காவல்துறையினர் கடந்த ஜூலை 22-ம் தேதி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது, அந்தப் பண்ணை வீட்டில் இருந்த 23 பெண்கள் உள்பட 73 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அங்கு இருந்த ஐந்து சிறுமிகளையும் காவல்துறையினர் மீட்டனர்.
அந்த பண்ணை வீட்டில் இருந்து 400 மதுபான பாட்டில்கள் மற்றும் 500 ஆணுறைகள் அடங்கிய பெட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பெர்னார்ட் மாரக் தலைமறைவாகி விட்டார். இவரை கைது செய்ய வெஸ்ட் கரோ ஹில்ஸின் துரா நீதிமன்றத்தின் பிடிவாராண்டுடன் காவல்துறையினர் மாராக்கை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெர்னார்ட் மாராக் ஹாபூரில் இருப்பது காவல்துறைக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, உத்தர பிரதேச காவல்துறையினரால் ஜூலை 26-ம் தேதி மாலை பெர்னார்ட் மாராக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கரோ ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் வி.எஸ்.ராத்தோர் தெரிவித்துள்ளதாவது :
”மாராக்கை பல நாள்களாக காவல்துறையினர் தேடி வந்தனர். அவரது கைப்பேசி மூலம் மாராக் ஹாபூரில் இருப்பது தெரிந்தது. எனவே, உத்தர பிரேதேச காவல்துறையின் உதவியால் ஜூலை 26ம் தேதி மாலை 7.15 மணிக்கு மாரக் கைது செய்யப்பட்டார். இவரை அழைத்து வர ஜூலை 27 தேதி அன்று மேகாலயா காவல்துறை ஹாபூர் சென்றனர்.” எனத் தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டியில் புறக்கணிக்கப்படும் இந்தியர்கள்