மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில், கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக அம்மாநில தலைநகர் மும்பையில் சாலை மற்றும் தெருக்களில் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ளது. கன மழையால் மராட்டிய மாநிலத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கனமழை பெய்து வருவதால், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.
மராட்டிய மாநில புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்புப் பணிகளில் 5 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளது.