ஃப்ரீ ஃபயர் விளையாட்டை தடை செய்த பிறகும் இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாகர்கோயிலை சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் ஆன்லைனில் ஃப்ரீ ஃபயர் விளையாடி வந்த நிலையில் காணாமல் போனதாகவும், அவரை மீட்கக் கோரியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அவரது தாயார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், முற்றிலுமாக தடை செய்யப்பட்ட நிலையில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டை இளைஞர்கள் விளையாடுவது எப்படி? காவல்துறையினர், சைபர் பிரிவினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, ‘ஃப்ரீ ஃபயர்’ விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.