உலகமெங்கும் ஹிந்தி மொழி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், 22 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளாக உள்ளன. 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் ஹிந்தி மொழி நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி ‘ஹிந்தி மொழி நாள்’ கொண்டாடப்படும் என அப்போதைய முதல் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி ஹிந்தி மொழி அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்படுகிறது என இந்திய அரசியல் சாசனம் அங்கீகாரம் அளித்தது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 14) ஹிந்தி மொழி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உலகமெங்கும் ஹிந்தி மொழி, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது. இந்தியின் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்திறன் எப்போதும் அனைவரையும் ஈர்க்கிறது. ‘ஹிந்தி திவாஸ்’ அன்று, அந்த மொழியை செழுமையாகவும், அதிகாரமளிக்கும் வகையிலும் மாற்ற அயராது பங்காற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹிந்தி மொழி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாவது:
ஹிந்தி மொழியானது தேசத்தை இணைக்கும் பாலமாக திகழ்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பனாக ஹிந்தி இருக்கிறது. ஹிந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ஹிந்தியை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் பங்காற்றிய மாபெரும் ஆளுமைகளை நான் வணங்குகிறேன்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.