பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் கோயிலில் வழிபாடு செய்யவிடாமல் மாற்று சமுகத்தினர் தடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகாவில், அருள்மிகு மாதரசி அம்மன் கோயில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில் இருப்பதாகவும், இந்தக் கோயிலில் தாங்கள் வாழையடி வாழையாக வழிபாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அங்கு வசிக்கக் கூடிய மாற்று சமூகத்தினர் கோயிலுக்குள் பட்டியலின மக்களாகிய தங்களை வழிபாடு செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும், இந்தக் கோயில் அவர்களுக்கு மட்டும்தான் என சொந்தம் என உரிமை கொண்டாடுவதாகவும் மேடையாண்டி கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்த மனுவில், அந்தக் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதனால், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு பூஜை செய்ய தங்களுக்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாகவும், அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த தங்களை கோயிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மேடையாண்டி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன், கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
அதோடு நீதிபதி, அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு செய்வதை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி விசாரணையை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்; வெளிவந்த பாடல்!