சினேகன் எந்த ஒரு ஆதாரமில்லாமல் கொடுத்த பொய் புகார் தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாலேயே நீதிமன்றத்தை நாடினேன் என நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் ‘சினேகம் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தன்னையும் தனது அறக்கட்டளையும் அவதூறாக பேசி விளம்பரம் தேடி வருவதாக நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இருவரும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் புகாரளித்ததால், சைபர் கிரைம் காவல்துறை இருவரையும் விசாரணைக்கு அழைத்து சமரசம் பேசி அனுப்பிவைத்தனர்.
ஆனால், அதன்பின் நடிகை ஜெயலட்சுமி, திரைப்பட பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த மாதம் 19-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு நகலை இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துவிட்டு நடிகை ஜெயலட்சுமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சினேகன் அறக்கட்டளை மூலமாக பணமோசடியில் ஈடுபட்டதாக தன் மீது பாடலாசிரியர் சினேகன் பொய்யான புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மூன்று முறை அழைத்து விசாரணை செய்து பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், சினேகன் எந்த ஒரு ஆதாரமில்லாமல் கொடுத்த பொய் புகார் தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாலேயே நீதிமன்றத்தை நாடினேன். நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தர்மம் மீண்டும் வென்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: “என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” பொன்னியின் செல்வன் புரோமோஷனில் சரத்குமார் ஆவேசம்!