குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான லவ்லினா கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதைத் தொடர்ந்து, லவ்லினா வரும் ஜூலை 28-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரவில் கலந்துக்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
லவ்லினா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு நான் ஆளாகிக்கொண்டிருப்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக்ஸில் நான் பதக்கம் வெல்ல உதவிய என்னுடைய பயிற்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படுகிறார்கள்.
மேலும், ஆயிரம் முறை கோரிக்கைகள் விடுத்த பிறகும் அவர்கள் தாமதமாகவே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், இது என்னுடைய பயிற்சியைப் பாதிக்கிறது. இதனால் நான் மனரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறேன்.
இந்நிலையில், காமன்வெல்த் கிராமத்திலிருந்து என்னுடைய பயிற்சியாளர் சந்தியா வெளியேற்றப்பட்டு விட்டார். பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டதால் என்னுடைய பயிற்சி, போட்டி தொடங்கும் 8 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பலமுறை கோரிக்கை விடுத்த பின்பும் என்னுடைய இன்னொரு பயிற்சியாளர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் என்னால் எப்படி விளையாட்டில் கவனம் செலுத்த முடியும் எனத் தெரியவில்லை.
முன்னதாக, கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது இதுபோன்ற நிலை என்னுடைய ஆட்டத்திறனைப் பாதித்தது. இந்த முறையும் இந்த அரசியலால் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் நான் பாதிக்கப்படக்கூடாது. இந்த அரசியலைத் தகர்த்து இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்வேன் என நம்புகிறேன்
இவ்வாறாக லவ்லினா தெரிவித்துள்ளார்.
சதுரங்க ஆட்டத்தின் போது சிறுவனின் விரலை நசுக்கிய ரோபோ