போலி துப்பாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த யூடியூபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள், கோவை, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதிக்கு நேற்று இரவு வந்தனர். அப்போது அவர்கள் சாலையோரம் நின்றுகொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டனர். திருநங்கையும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த இளைஞர் ஒருவர் போலியான ஏர்கன் பிஸ்டல் துப்பாக்கி காண்பித்து திருங்கையை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பகுதி வழியாக சென்ற சிலர் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தததோடு, அவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் இயக்கி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், இவர்கள் மூவரும் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திலீப் (33), சமீர் (30) மற்றும் கிஷோர் (23) என்பதும், இவர்கள் யூடியூப் சேனல் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இவர்கள் மீது ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
‘முதலமைச்சர் என்றால் முதுகெலும்பு வேண்டும்’ – விமர்சித்த சிபிஐ செயலாளர்