கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்தக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர் ஏராளமான மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார்கள் அதிகமாக பகிரப்பட்டு வந்தன.
இதையடுத்து, இந்தச் சம்பவங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் முன்னதாக வந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, தற்போது இந்தப் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவரின் பெயரில் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று பகிரப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட மாணவி அதுபோன்ற எந்த விதமான பாலியல் தொந்தரவும் தனக்கு கொடுக்கப்படவில்லை எனவும், ஆசிரியர் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்தும் ஒருபுறம் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி.. கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலை- பாமக நிறுவனர்