கருக்கலைப்பு விதிகளைப் பாதுகாக்க மாகாண ஆளுநர்களுடன் காணொளி வாயிலாக அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார்.
கருக்கலைக்கும் உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மக்களுக்கான உரிய பாதுகாப்பை அரசு வழங்கும் என்று கூறி இருந்தார். இதனையடுத்து, கருக்கலைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் மாகாண ஆளுநர்களுடன் ஜோ பைடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
வட கரோலினா, கனெக்டிகட், நியூ யார்க் மற்றும் நியூ மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஆளுநர்கள் இந்த காணொளியில் பங்கேற்றனர். இந்த மாகாணத்தின் ஆளுநர்கள் கருக்கலைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாது தங்களது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முட்டுக்கட்டை போட அமைச்சரவைக்கு ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். கருக்கலைப்புக்கு எதிராக சட்டத்தினைக் கொண்டு வர போதுமான வாக்குகள் இல்லை என்று தெரிவித்துள்ள ஜோ பைடன், நவம்பர் மாதத்துக்குள் அனைவரும் தங்களது வாக்கினை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பைப் பொறுத்தவரை, எந்த ஒரு சட்டத்தையும் தடுக்க அமைச்சரவையில் உள்ள 100 பேரில் 60 பேருடைய வாக்குகள் தேவைப்படுகிறது. தற்போது கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக 50 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 50 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.