மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான இருபது ஓவர் தொடரின் இறுதி இருபது ஓவர் போட்டி நேற்று ஹைதரபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஆடுகளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன், ஆரோன் பின்ச் ஆகியோர் களமிறங்கினர். பின்ச் 7 ரன்களில் வெளியேற அடுத்த வந்த ஸ்டீவன் சுமித் 9, மேக்ஸ்வெல் 6 ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜோஷ் இங்லிஸ் 24 ரன்கள் எடுத்திருந்தி நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா சர்வதேச அளவில் சாதனை…. ஹிட்மேன் என்றால் சும்மாவா?
சீராக ஆஸ்திரேலிய அணிக்கு ரன்கள் சேர்ந்துக்கொண்டிருக்க, கடைசி கட்டத்தில் களமிறங்கிய டேனியல் சாம்ஸ், டிம் டேவிட் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 1 ரன்களுக்கும் மற்றும் ரோகித் சர்மா 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இருப்பினும், இதையடுத்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை திணறடித்த சூர்யகுமார் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 63 ரன்களில் ஆட்டமிழந்ததும் கடைசி 5 பந்துகளில் இந்திய அணி வெற்றிபெற 5 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியாக ஒரு பந்து மீதமிருக்க ஹர்திக் பாண்டியா பவுண்ட்ரிக்கு விளாசி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.