ஆசியக் கோப்பை 20 ஓவர் போட்டியில் பிரதான சுற்றில் விளையாட ஹாங்காங் அணி தகுதியடைந்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் வாரியம், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை 1984-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆசியக் கோப்பை தொடரானது 50 ஓவர், 20 ஓவர் என இரு வகைகளிலும் நடைபெறும்.
இதுவரையில், இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. மேலும், நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பைப் தொடர் முன்னதாக இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவருக்கான ஆசிய கோப்பை தொடர் மாற்றப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 20 ஓவர் ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா இன்று வெளியிட்டார். வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை இந்த ஆசியக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
மேலும், இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி தகுதிச்சுற்றில் இடம்பிடித்த அணியுடன் இந்தியா மோதுகிறது.
இந்நிலையில், 20 ஓவர் ஆசியக் கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நான்கு நாடுகள் விளையாடின. ஒவ்வொரு அணியும் தலா மூன்று ஆட்டங்களில் விளையாடியதில் ஹாங்காங்க் அணி முதலிடம் பெற்று இந்திய அணி உள்ள குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் குவைத் – சிங்கப்பூர், ஹாங்காங் – ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதின. ஒரு இடத்துக்கு ஹாங்காங் – ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய அணிகள் போட்டியிட்டன.
குவைத் அணி சிங்கப்பூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 4 புள்ளிகளுடன் ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு நெருக்கடி தந்தது. தகுதிச்சுற்றில் கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை ஹாங்காங் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஹாங்காங் அணி, ஆசியக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடும் தகுதியை அடைந்தது.
இதன்மூலம், ஆகஸ்ட் 31 அன்று ஹாங்காங் அணி இந்தியாவுக்கு எதிராகவும் செப்டம்பர் 2 அன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.