இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மோதும் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க பேட்டர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். 15 ரன்களுடன் ரோஹித் வெளியேற, பின்னர் வந்த கோலியும் நிலைக்காமல் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து, கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து களம்கண்டனர். கே.எல்.ராகுல் 51 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் அதிரடியை காட்ட 61 ரன்கள் விளாசினார். மொத்தத்தில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க இயலாமல், ஜிம்பாப்வே பேட்ஸ்மென்கள் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக சிகந்தர் ரசா 34 ரன்களும், ரியான் பர்ல் 35 ரன்களும் எடுத்தனர். மொத்தத்தில், ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு சுருண்டது.
இதன்மூலம், இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. 10-ம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு…!