மகளிர் உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது 2-ஆவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 10-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கியது. இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த மகளிர் உலகக் கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதைத்தொடர்ந்து, நேற்று உலகக் கோப்பைத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்டெஃபானி டெய்லர் 42 ரன்களும், ஷெமேய்ன் கேம்ப்பெல் 30 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 3, ரேணுகா சிங், பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய இன்னிங்ஸில் ஷஃபாலி வர்மா 33 ரன்களையும், ரிச்சா கோஷ் 44 ரன்களையும் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். மொத்தத்தில் இந்திய அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்து வென்றது. மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் கரிஷ்மா ரம்ஹராக் 2, சினெல் ஹென்றி, ஹேலி மேத்யூஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க இதோ வாய்ப்பு!