தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் ஆட்டத்தில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி, முதலில் நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித் – ராகுல் ஜோடி களமிறங்கியது. ரோஹித் 43 ரன்களுக்கு வெளியேற, ராகுல் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் கோலி – சூர்யகுமார் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்து ஸ்கோரை அதிரடி காட்டியது.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்த சூர்யகுமார், 22 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். 5-ஆவது வீரராக வந்த தினேஷ் கார்த்திக் வழக்கம்போல் கடைசி ஓவரில் தனது விஸ்வரூபத்தை அரங்கேற்றினார். முடிவில் கோலி 49 ரன்களுடனும், கார்த்திக் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா, ரைலீ ருசௌவ் ஆகியோர் டக் அவுட்டாக, எய்டன் மார்க்ரம் 33 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இருப்பினும், 15 ஓவர்களுக்குப் பிறகு, குவின்டன் டி காக்கும், டேவிட் மில்லரும் இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். இருப்பினும், தென்னாப்பிரிக்காக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களையே எட்டியது. முடிவில் டிகாக் 69 ரன்களுடனும், மில்லர் 106 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது 2 வெற்றிகளுடன் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது. மேலும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலக கோப்பையில் பும்ரா இல்லையா? கங்குலி சொன்ன பதில்..