இங்கிலாந்துக்கு எதிரான 2-வது இருபது ஓவர் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நேற்று டெர்பியில் 2-வது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பௌச்சியர் 34 ரன்களும் ஃப்ரேயா கெம்ப் 51 ரன்களும் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர்; வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா
இதைத்தொடர்ந்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். இதில் ஷெஃபாலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
முதல் ஆறு ஓவர்களில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. இதன்பின் மந்தனா அதிரடி காட்ட இந்திய அணி வெற்றிப்பெற்றது. இந்திய மகளிர் அணி, 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக மந்தனா தேர்வானார். மந்தனா 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
3 ஆட்டங்கள் கொண்ட இந்த இருபது ஓவர் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ளன. 3-வது ஆட்டம் இன்று பிரிஸ்டாலில் நடைபெறவுள்ளது.