இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தற்போது விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது.
இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. அந்த அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. ஹேண்ட்ஸ்காம்ப் 7, கிரீன் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இதன்பின்பு, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சீராக விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 186-க்கு உயர்ந்த பிறகு ஹேண்ட்ஸ்காம்ப், அஸ்வின் பந்தில் தனது விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலிய வீரர் கிரீன் 21 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆக, அடுத்து ஸ்டார்க், மர்ஃபியை போல்ட் செய்து அசத்தினார் உமேஷ் யாதவ். மேலும், அஸ்வினும் தன் பங்குக்கு அலெக்ஸ் கேரி, லயனின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மொத்தத்தில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் எதிர்பாராதவிதமாக 76.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. இந்திய அணி சார்பில் களமிறங்கிய சுப்மன் கில் 5, ரோஹித் சர்மா, 12, கோலி 13, ஜடேஜா 7, ஷ்ரேயஸ் ஐயர் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
இந்திய பேட்டர்களில் புஜாரா மட்டும் சிறப்பாக விளையாட, மறுமுனையில் பரத் தனது விக்கெட்டை 3 ரன்களுக்கு இழந்தார். புஜாராவுடன் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்த அஸ்வின், 16 ரன்களில் லயன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய புஜாரா, 108 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்து 59 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். உமேஷ் யாதவ்வும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசிக்கட்டத்தில் ஓரளவு ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார் அக்ஷர் படேல். 39 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் கடைசியாக சிராஜ் டக் அவுட் ஆனார். மொத்தத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.