வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்த வங்கதேச அணிக்கு இன்னும் 471 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. இதன் பின்பு நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்தது.
இதற்கு பின்பு களமிறங்கிய வங்கதேச அணி, இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில், 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் வங்கதேச அணி இழந்தது. மொத்தத்தில், தனது முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பின்பு, இந்திய அணியானது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க, தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்களில் கே.எல்.ராகுல் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப, புஜாரா களத்திற்கு வந்தார்.
சுப்மன் கில் மற்றும் புஜாரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் தனது சதத்தை பதிவு செய்ய, புஜாராவும் தனது சதத்தை பதிவு செய்தார். 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் வெளியேற, விராட் கோலி களத்திற்கு வந்தார். இதையடுத்து, இந்திய அணி 258 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. களத்தில் புஜாரா 102 ரன்கள் எடுத்திருக்க, கோலி 19 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியாவின் டிக்ளரைத் தொடர்ந்து, 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. தற்போது அந்த அணி 42 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் உள்ளது. களத்தில், நஜ்முல் 25 ரன்களுடனும், சாகிர் ஹசான் 17 ரன்களுடனும் உள்ளனர்.
நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் வெற்றிப்பெற வங்கதேச அணிக்கு இன்னும் 471 ரன்கள் தேவைப்படுகிறது.
‘எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்’ – அறிவுரை கூறிய உலக பணக்காரர்…