நேற்று நடந்த இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் அயர்லாந்து அணியினை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணியானது தொடரினைக் கைப்பற்றியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிராக இரண்டு இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து சென்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று டாஸ் வென்ற இந்திய அணிக்கேப்டன் முதலில் பேட்டிங்கிணைத் தேர்ந்தெடுத்தார்.
இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய இஷன் கிஷான் ஐந்து பந்துகளை எதிர்கொண்டு மூன்று ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் அடைர் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹூடா-சஞ்சு சாம்சனின் அதிரடி..
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் இரண்டாவது விக்கெட்டுக்காகக் களமிறங்கிய தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியானது அயர்லாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தது.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்களை (4 சிக்ஸர் , 9 ஃபோர் ) குவித்தார். சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா, இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தினைப் பதிவு செய்தார்.
57 பந்துகளை எதிர்கொண்ட ஹூடா 104 (6 சிக்ஸர், 9 ஃபோர்) ரன்கள் குவித்தார்.இருபது ஓவர்களைப் பொறுத்தவரை இந்திய அணிக்காக சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் மட்டுமே சதமடித்திருந்தனர்.
அயர்லாந்துக்கு எதிரான இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் தீபக் ஹூடா இந்த பட்டியலில் தன்னை இணைத்துள்ளார்.
சஞ்சு-ஹூடா ஜோடியானது 87 பந்துகளை எதிர்கொண்டு 176 ரன்கள் குவித்தது. இருபது ஓவர் போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் இதுவேயாகும்.
சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்ததுத்து தங்களது விக்கெட்டினை இழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் மார்க் அடைர் மூன்று விக்கெட்டுகளையும், ஜோஷ் லிட்டில் மற்றும் கிரேக் யங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அசத்திய அயர்லாந்து..
226 ரன்கள் என்னும் இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியானது திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் பால்பிமி ஆகியோர் சிறப்பான மற்றும் அதிரடியான தொடக்கத்தினை அளித்தனர்.
பால் ஸ்டிர்லிங் 18 பந்துகளில் 40 ரன்களும் (5 ஃபோர், 3 சிக்ஸர்கள்), பால்பிமி 37 பந்துகளை எதிர்கொண்டு 60 ரன்களும் (3 ஃபோர், 7 சிக்ஸர்கள்) குவித்தனர். இந்த ஜோடியானது 35 பந்துகளுக்கு 72 ரன்கள் அடித்தது.
இறுதி வரை சிறப்பாக விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியினைத் தழுவியது.
அணியில் ஹாரி டெக்டர் 39 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 34 ரன்களும், மார்க் அடைர் 23 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணித் தரப்பில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஸ்னோய் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
சிறப்பாக விளையாடிய தீபக் ஹுடாவிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரினை இந்திய அணியானது கைப்பற்றியுள்ளது.
1.8 கோடி சம்பள வாய்ப்பை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பெற்ற இந்திய மாணவர்!