பொது விநியோக திட்டத்தின் கீழ் இயங்கும் 2 தனியார் குழுமங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை செய்து வருகிறது.
தமிழகத்தில் பொது விநியோக திட்டதிற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்க சில தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில், நேற்று தமிழகம் முழுவதும் 80 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சென்னையில், மண்ணடியில் அருணாச்சலம் இம்பெக்ஸ், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில் மற்றும் காமாட்சி அண் கோ, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டர்கேரடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட சில நிறுவனங்களிலும் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்புடைய இடங்கள் என தமிழகம் முழுவதும் 80 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் இயங்கும் 2 தனியார் குழுமங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம் சாட்டியிருந்தன. இதன் அடிப்படையில் தற்போது சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.