குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுகிறோம் என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகரப் பகுதிகளில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது. தர்ஹா ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி, கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தர்ஹா ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ‘ராஜ’ கால்வாயில் பாய்கிறது. அந்த கால்வாய் ஆக்கிரமிப்பின் காரணமாக, ‘ராஜ’ கால்வாய் அளிவல் குறுகியுள்ளது.
மேலும், அதன் கரைகளில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. நள்ளிரவு நேரத்தில் திடீரென குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளநீர், கே.சி.சி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை முழுவதுமாக மூழ்கடித்திருக்கிறது. பைக்குகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக அருகிலுள்ள மேடான பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனால், மக்கள் பெரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது; ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இப்படியான பிரச்சினைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். ராஐ கால்வாயிலிருந்து மழைநீர் வெளியேறி குடியிருப்புகளை மூழ்கடிக்கிறது. குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுகிறோம். ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் காட்டிவருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சவரனுக்கு 120 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!