உதயநிதிக்கு அமைச்சராக முடிசூட்டி, திமுக வாரிசு அரசியல் செய்வதாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்ற அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மழையைக் கண்டு பயப்படுகிற கூட்டம் அதிமுக இல்லை என்று கூறினார்.
நாளை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டு விழா நடக்கிறது. என்ன நடக்கிறது முடிசூட்டு விழா நடக்கிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது என வஞ்சபுகழ்ச்சி அணியாக பேசினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கருணாநிதி முதல்வராக இருந்தார். அவருக்கு அடுத்து அவரது மகன் ஸ்டாலின் முதல்வராக ஆகியுள்ளார். இவருக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை திமுகவின் தலைவர்களில் ஒருவராக கொண்டு வருவதற்கு தான், இந்த முடிசூட்டு விழா என கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், உதயநிதி வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராக செயல்படுவார் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பேசிய அவர், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் எந்த ஒரு நன்மையையும் கிடைக்காத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான் என்றும் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இன்று நடைபெறுகிறது. மாநிலத்துக்கு என்று ஒரு முதல்வர் தான் இருப்பார். ஆனால், தமிழகத்திற்கு 4 முதல்வர்கள் இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய மருமகன் தான் அந்த 4 முதல்வர்கள்.
திமுக என்றால் அது குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி; அது கட்சி இல்லை கார்ப்பரேட் கம்பெனி என்றும் கடுமையாக விளாசினார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் விசுவாசமாக இருந்தால், உழைப்பவர் எவராக இருந்தாலும் அவருடைய வீட்டு கதவை தட்டி பதவி கொடுக்கிற கட்சி அதிமுக என்றும்,சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், முதல்வர் கூட ஆகக் கூடிய கட்சி தான் அதிமுக என்றும் தெரிவித்தார்.
குதிரையேற்ற போட்டிகளில் பதக்கங்கள் வென்ற காவல்துறை வீரர்கள்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து