ஒருவனை நாட்டுக்காக இழந்தாலும், இன்னொருவனையும் அனுப்புவேன் என மதுரையைச் சேர்ந்த உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் ரஜோரி பகுதிக்கு அருகே உள்ள ராணுவ முகாமில் நேற்று (ஆகஸ்ட் 11) அதிகாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். மேலும் ராணுவ வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். 2 பயங்கரவாதிகள் மேலும் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 24) ஆவார்.
லட்சுமணனின் சொந்த ஊர் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டி ஆகும். அவருடைய பெற்றோர் தர்மராஜ்-ஆண்டாள் ஆவர். இவர்களின் மூத்த மகன் ராமன். இளைய மகன்தான் லட்சுமணன். ராமன், லட்சுமணன் இரட்டையர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், லட்சுமணன் உயிரிழந்த சம்பவத்தை நேற்று (ஆகஸ்ட் 11) மதியம் ராணுவ அதிகாரிகள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, நாட்டிற்காக உயிர் நீத்தது பெருமை என்றும் இரண்டு மகன்களில் ஒரு மகனை நாட்டுக்காக கொடுத்ததாகவும் அதேபோல், இன்னொரு மகனையும் நாட்டுக்காக சேவை செய்ய அனுப்பப் போவதாகவும் உயிரிழந்த லட்சுமணனின் தந்தை தர்மராஜ் தெரிவித்துள்ளார்.