பாகிஸ்தான் ஆட்டம் முக்கியமானதுதான். ஆனால், ஒவ்வொரு முறையும் இதைப்பற்றி பேசுவதில் எந்தவித பயனும் இல்லை என ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக உச்ச நிலையை அடைந்து வருகிறது. நாளை (அக்டோபர் 16) 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இந்த உலகக் கோப்பைப் போட்டியானது நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.
இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
மேலும், நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று நவம்பர் 13-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:மாணவர்களின் வழிகாட்டி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள்-குடும்பத்தினர் மரியாதை
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இறுதிக்கட்டத்தில் முடிவெடிப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தேர்வு செய்யப்பட்ட தகவலை வீரர்களிடம் முன்கூட்டியே சொல்லி விடுவேன். ஏனெனில் அப்போதுதான் அவர்களால் நன்றாக பயிற்சி எடுக்க முடியும்.
இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் முக்கியமானதுதான். ஆனால், ஒவ்வொரு முறையும் இதைப்பற்றி பேசுவதில் எந்தவித பயனும் இல்லை. பாகிஸ்தான் வீரர்களுடன் ஆசியக் கோப்பை போட்டியின் போதும்கூட, வீட்டில் என்ன கார் வைத்துள்ளாய் , குடும்பம் எப்படியுள்ளது என்றுதான் பேசிக்கொண்டோம்.
வீரர்களின் காயத்தைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். சூர்ய குமார் யாதவ் அவரது அபாரமான ஃபார்மை தக்க வைத்துக்கொள்வாரென நம்புகிறேன்.
இவ்வாறாக அவர் தெரிவித்தார்.